திருச்சி சிறையில் முன்னாள் எம்எல்ஏ உண்ணாவிரதம்!
திருச்சி: திருச்சி சிறையில் முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள ஆவராம்பட்டியில் கடந்த சில வருடங்களாக சுடுகாடு பிரச்சினையால் அங்கு கள்ளர் மற்றும் தேவேந்திரர் சமூகத்தினருக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஊர் குடும்பன் தேர்வு செய்வது வழக்கம். இந் நிலையில் ஊர் கும்பன் தேர்வு செய்வதில் அந்த பகுதி மக்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
கலவரம் வெடித்து இரு சமூகத்தினரும் வெட்டு குத்தில் இறங்கினர். இதனால் இந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மேலும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை தாக்கியதாக கூறி முன்னாள் எம்எல்ஏவும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளருமான முருகவேல் ராஜன் மற்றும் 35 ஆண்கள், 23 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்பு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் தங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ள போலீசாரை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருச்சி மத்திய சிறையில் இன்று காலை முதல் முருகவேல் ராஜன் மற்றும் 35 ஆண்கள், 23 பெண்கள் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து கூற சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications