இலவச விமான பணிப்பெண் பயிற்சி: திடீர் நிபந்தனையால் நிராகரிக்கப்பட்ட பெண்கள்
சென்னை: தமிழக அரசின் இலவச விமான பணிப்பெண் பயிற்சிக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில், தேர்வுக் குழுவினரின் திடீர் நிபந்தனையால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் நிராகரிக்கப்பட்டதால் வெளியூரிலிருந்து வந்தவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.
தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 200 பெண்களுக்கு இந்த ஆண்டு விமான பணிப்பெண் பயிற்சி இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த பயிற்சிக்கு பெண்களை தேர்வு செய்ய சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நவம்பர் 12, 13 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வின் முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நேர்முகத் தேர்வுக்கு குவிந்து விட்டனர்.
பயிற்சிக்கு நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, 17 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், கல்வி, ஜாதி, வருமானம் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களையும் உடன் கொண்டு வர வேண்டும் என்றும் முதலிலேயே அறிவிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்விற்கு வந்திருந்த அனைவரும் தேர்வாளர்கள் சொல்லிய ஆவணங்களுடன் வந்திருந்தனர். ஆனால் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்த தேர்வாளர்கள், பயிற்சிக்கு வரும் பெண்களின் உயரம் 5.2 அடியாக இருக்க வேண்டும் என்று திடீரென்று ஒரு நிபந்தனையை விதித்தனர்.
இந்த திடீர் நிபந்தனையால் வெளியூர்களிலிருந்து வந்த ஏராளமான பெண்கள் பயிற்சியில் சேர தகுதியில்லாமல் நிராகரிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நேர்முக தேர்விற்கு வந்த ஒரு பெண் கூறியதாவது,
ஜாதி, வருமானம், கல்வி சான்றிதழ்களை மட்டும் எடுத்து வந்தால் போதும் என்றுதான் அறிவிப்பு செய்திருந்தனர். ஆனால் திடீரென்று உயரம் குறைவாக இருப்பதாக சொல்லி வெளியேற்றி விட்டனர். இந்த நிபந்தனையை முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருந்த பயணச் செலவாவது மிச்சமாகியிருக்கும் என்று புலம்பி தள்ளினார்.