ஜெ. வீட்டுக்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர் கைது
சென்னை: கடந்த ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டு வாசல் கேட் மீது ஸ்கூட்டரைக் கொண்டு மோதி பரபரப்பை ஏற்படுத்திய நபர் மீண்டும் நேற்று இரவு ஆட்டோவில் ஜெயலலிதா வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு ஜோஷ்வா கார்த்தி என்ற நபர் ஸ்கூட்டரில் வந்தார். நேராக வீட்டு வாசல் கேட் மீது ஸ்கூட்டரால் மோதினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
விசாரணையில் அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2 வாரங்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதே ஜோஷ்வா கார்த்தி, நேற்று இரவு ஒரு ஆட்டோவில் போயஸ் தோட்டம் வந்தார். ஜெயலலிதா வீட்டு வாசல் கேட்டை இடிப்பது போல ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார்.
ஏற்கனவே தண்டபாணி, இளங்கோ என இரு நபர்கள் கடந்த சில நாட்களில் ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஜோஷ்வா ஆட்டோவுடன் கேட்டில் இடிப்பது போல வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவலர்கள் விரைந்து வந்து ஜோஷ்வாவைப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி தேனாம்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு விசாரித்தபோது ஏற்கனவே ஜோஷ்வா செய்த செயல் குறித்துத் தெரிய வந்தது.
காவல் நிலையத்தில் அவர் ஆக்ரோஷமாகவும், வெறி பிடித்தவர் போலவும் பேசினார். இதையடுத்து அவரை பான்யன் தொண்டு நிறுவன மன நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று முடிந்ததும் அவரை விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஆணையரிடம் அதிமுக புகார்:
அடுத்தடுத்து ஜெயலலிதா வீட்டை நோக்கி மர்ம நபர்கள் படையெடுத்துவது குறித்து இன்று அதிமுக சார்பில் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக குழு ஆணையரை சந்தித்து இதுதொடர்பாக ஒரு புகார் மனுவைக் கொடுத்தது. அதில், மர்ம நபர்கள் அடிக்கடி ஜெயலலிதாவின் வீட்டுக்குள் புகுந்து தீய செயலில் ஈடுபட முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. எனவே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிப்பதோடு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.