நெட்ஸ்கேப் நிறுவனரின் தாராள நன்கொடை
ஸ்டான்போர்டு: பிரபலமான மொசைக் மற்றும் நெட்ஸ்கேப் பிரவுசரை உருவாக்கிய மார்க் ஆண்டர்சன், ஸ்டான்போர்டு மருத்துவமனைக்கு 27.5 மில்லியன் டாலர் நன்கொடையை அளித்துள்ளனர்.
புகழ் பெற்ற மொசைக் பிரவுசரை கூட்டாக சேர்ந்து உருவாக்கியவர் மார்க் ஆண்டர்சன். பின்னர் தனியாக நெட்ஸ்கேப் பிரவுசரை உருவாக்கியவர்.
தற்போது இவரும், இவரது மனைவி லாராவும் இணைந்து ஸ்டான்போர்டு மருத்துவமனைக்கு 27.5 மில்லியன் டாலர் நிதியை நன்கொடையாக அளித்துள்ளனர்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்தவும், அதி நவீன வசதிகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கவும் இந்த நிதியை நன்கொடையாக அளித்துள்ளதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது உள்ள முக்கிய மருத்துவமனை இந்த ஸ்டான்போர்டு மருத்துவமனை. இங்குள்ள அவசர சிகிச்சை மையம்தான் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியின் மிக முக்கியமான அவசர சிகிச்சைப் பிரிவாகும்.
சான்பிரான்சிஸ்கோவவுக்கும், சான் ஜோஸ் நகருக்கும் இடையே உள்ள ஒரே அதி நவீன சிகிச்சை மையமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த மருத்துவமனை மட்டுமே முக்கிய மருத்துவ சேவையாற்றுகிறது.
ஆனால் நிதிப் பற்றாக்குறையால் இந்த மருத்துவமனையில் அதி நவீன வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது ஆண்டர்சன் வழங்கியுள்ள இந்த நிதியால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.
ஸ்டான்போர்டு மருத்துவமனைக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இங்கு பணியாற்றும் டாக்டர்களில் பலர் ஆராய்ச்சியாளர்களாகவும் உள்ளனர். ஆய்வுத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை இந்த மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.
ஆய்வாளர்கள் மட்டுமல்லாது நல்ல பல மருத்துவ பேராசிரியர்களையும் இந்த மருத்துவமனை வழங்கியுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியின் மூலம் புதிய மருத்துவமனை ஒன்றை கட்ட ஸ்டான்போர்டு மருத்துவமனை தீர்மானித்துள்ளதாம். இந்த மருத்துவமனை 2015ம் ஆண்டில் உருவாகும் என்று தெரிகிறது. இதற்கு பாலோ ஆல்டோ நகர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய மருத்துவமனையிலும் புதிய அதி நவீன அவசர சிகிச்சை மையம் கட்டப்படவுள்ளது. தற்போதைய மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை மையம் 1974ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆண்டுக்கு 24 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள்தான் இதில் உள்ளன.
ஆனால் தற்போது இதை விட மூன்று மடங்கு நோயாளிளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் புதிய மருத்துவமனை கட்டவும், புதிய அவசர சிகிச்ைச மையத்தை நிர்மானிக்கவும் ஸ்டான்போர்டு மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications