ஏ-380 விமானம் வாங்கும் சவூதி இளவரசர் அல்வாலித்
பாரீஸ்: உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமை கொண்ட ஏர்பஸ் நிறுவனத்தின் சூப்பர் ஜம்போ ஏ-380 விமானத்தை சவூதி இளவரசர் அல்வாலித் பின் தலால் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையை சமீபத்தில் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ-380 விமானம் பெற்றது. இந்த சூப்பர் ஜம்போ விமானத்தை சமீபத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்கி தனது சேவையை தொடங்கியது.
இந்த நிலையில் முதன் முதலாக இந்த மெகா விமானத்தை தனி நபர் ஒருவர் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார். அவர்தான் சவூதி இளவரசர் அல்வாலித்.
சில மாதங்களுக்கு முன்பே இந்த விமானத்தை வாங்க ஆர்டர் கொடுத்து விட்டார் அல்வாலித். ஆனால் இவரது பெயரை வெளியிடாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஏர்பஸ் நிறுவனம் அல்வாலித் விமானம் வாங்கப் போகும் தகவலை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் அல்வாலித்தும் ஒருவர். ஈரோ டிஸ்னி, பல்வேறு ஹோட்டல்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பறக்கும் அரண்மனை என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் ஏ-380 விமானத்தை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார் அல்வாலித்.
இவரிடம் ஏற்கனவே போயிங் 747-400 விமானம் ஒன்று உள்ளது. இதுதான் ஏ-380 வருவதற்கு முன்பு இருந்து வந்த மிகப் பெரிய விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஜம்போ விமானத்தில் 525 பேர் அமர்ந்து செல்ல முடியும். அதேசமயம், சீட்களில் மாற்றம் செய்தால் 800 பேர் வரை பயணிக்கலாம்.
ஒரு சூப்பர் ஜம்போ ஏ-380 விமானத்தின் விலை 300 மில்லியன் டாலர் ஆகும். அதேசமயம் தற்போது அல்வாலித் வாங்கவுள்ள விஐபி விமானத்தின் விலை இதை விட கூடுதலாக இருக்கும் எனத் தெரிகிறது. அந்த விலை விவரத்தை ஏர்பஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
விஐபி ஏ-380 விமானத்தில் காக்டெய்ல் பார்கள், காசினோக்கள், ஷவர், அதி நவீன படுக்கைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட வேறு பல சிறப்பு வசதிகளும் இடம் பெற்றிருக்கும். மேலும் வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ற வசதிகளையும் ஏர் பஸ் நிறுவனம் செய்து தரும்.
ஒரு தனி நபர் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தை வாங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications