பொய் கணவன்-போலி பாஸ்போர்ட்-அமெரிக்கா செல்ல முயன்ற பெண் கைது
மும்பை: பொய்யான திருமண சான்றிதழ், போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல விசா பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்தவர் டினா தசரத் படேல் (24). பாஸ்போர்ட் கூட இல்லாத இவர் அமெரிக்கா செல்ல விசா பெற ஏஜெண்டுகளை அணுகியுள்ளார். அவர்கள் அஸ்மா சாகித் தய் எனற பெயரில் டினாவுக்கு போலி பாஸ்போர்ட் உருவாக்கித் தந்தனர்.
மேலும் அமெரிக்காவில் வசித்து வரும் சாகித் தய் (22) என்பவரின் மனைவி என்று போலியாக திருமண சான்றிதழையும் உருவாக்கினர். இதற்கு சாகித்தும் உடந்தை. மும்பையைச் சேர்ந்த இவர் பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டவர் ஆவார்.
இந் நிலையில் தனது கணவருடன் வசிக்க அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்தார் அஸ்மா (டினா). இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேர்காணலுக்கு அழைத்தது.
அப்போது டினா மீது தூதரக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் முஸ்லீம் போலவே இல்லை. மேலும் அவரது பாஸ்போர்ட்டிலும் சந்தேகம் ஏற்பட்டதால் இருவரையும் தனித்தனியே கொண்டு போய் விசாரித்தனர்.
அப்போது உண்மையை மறைக்க முடியாமல் உடைந்து அழுதார் டினா. மும்பையைச் சேர்ந்த ஏஜெண்டுகள் சொன்ன யோசனையின்பேரில் தான் தானும் தனது குடும்பத்தினரும் இந்த வழியை நாடியதாகக் கூறினார்.
டினாவின் பாஸ்போர்ட்டை மும்பை போலீஸ் உதவியோடு தூதரக அதிகாரிகள் பரிசோதித்தபோது அது விரல் பிக்காபாய் படேல் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. தனது பாஸ்போர்ட்டைக் காணவில்லை என்று சில மாதங்களுக்கு முன் அகமதாபாத் போலீசில் புகார் கொடுத்து டூப்ளிகேட் பாஸ்போர்ட்டையும் வாங்கிவிட்டார் படேல்.
ஆனால், அவரது ஒரிஜினல் பாஸ்போர்ட்டை மாற்றி, அதை அஸ்மா என்ற பெயரில் டினாவுக்கு போலியாக தயாரித்து தந்துள்ளனர் ஏஜெண்டுகள்.












Click it and Unblock the Notifications