வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: எம்எல்ஏ கோரிக்கை
சிதம்பரம்: வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ துரை.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
துபாயில் கட்டுமானப் பணியின்போது நடந்த விபத்தில், காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலையைச் சேர்ந்த அருள்மொழி என்பவர் இறந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
இந்தியாவில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீட்டை விடவும், இந்தியப் பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவது வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இந்தியர்கள் அனுப்பும் சம்பளம் தான்.
வெளிநாடுகளில் இருந்து சம்பளப் பணத்தை பெறுவதில் இந்தியா உலகின் முதல் நாடாக இருப்பதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் கேரளாவுக்கு அடுத்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது.
கேரள அரசு அத்தகைய தொழிலாளர் நலனை பாதுகாக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல தமிழகத்திலும் வெளிநாட்டில் வேலைபார்க்கும் தமிழர்களின் நலனை பாதுகாக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.