இனிமேல் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை - பாமக
திருநெல்வேலி: இனிவரும் தேர்தல்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல், தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி
தென்மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு மாவட்டத்துக்கு 50,000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அனைத்து சமுதாயத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமாக சேருகிறார்கள். வட மாவட்டங்களை போல தென் மாவட்டங்களிலும் பாமக பலம் பெற்று வருகிறது.
திருச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாமகவை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது.
வரும் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்கள் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் சீட்டுகள் ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் 15 எம்.எல்.ஏக்களாவது சட்டமன்றத்துக்கு செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.
மக்கள் பிரச்சனைக்காக எங்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போராடி வருகிறார். அடுத்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி நிச்சயமாக ஆட்சியை பிடிக்கும். இனி வரும் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.
தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவோம் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். அதன்படி எங்கள் செயல்பாடுகள் இருக்கும். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இலவசங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம் போன்றவைகள் தருவதால் பொதுமக்களின் உழைப்பு குறைகிறது. மக்களை உழைக்க வைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றார் பொன்னுசாமி.












Click it and Unblock the Notifications