பழக்கூடை, குப்பைக் கூடையில் திருட்டு விசிடி விற்ற 3 பேர் கைது
சென்னை: சென்னை பர்மா பஜார் மற்றும் மின்ட் பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் திருட்டு விசிடிக்களை விற்ற 3 பேர் சிக்கினர். அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட தீபாவளி ரிலீஸ் படங்களின் திருட்டு விசிடிக்கள் குவியல் குவியலாக சிக்கின.
சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பர்மா பஜார் மற்றும் மின்ட் பகுதியில், கடந்த ஒரு வாரமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தீபாவளி ரிலீஸ் படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு விடப்படலாம் என்பதால் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போலீஸ் பிடியில் சையத் முகம்மது (28), ஜாகிர் உசேன் (35) ஆகியோர் வித்தியாசமான முறையில் போலீஸார் கண்ணில் பட்டனர். அவர்கள் இருவரும் பழம் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பழக் கூடையை போலீஸார் சோதனை போட்டபோது அதற்குள் திருட்டு விசிடிக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல துரை (36) என்பவர் குப்பைக் கூடைக்குள் திருட்டு விசிடிக்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்.
இவர்கள் மூன்று பேரிடமிருந்தும் 4375 திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் மற்றும் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் இந்த ஆண்டு ரூ. 10.34 கோடி மதிப்பிலான திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனராம்.
கடந்த ஆண்டு ரூ. 1 கோடி மதிப்பிலான திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களே சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications