ஏர்வாடியில் பலத்த மழை - 500 ஏக்கர் வாழை சேதம்
பணகுடி: ஏர்வாடி அருகே குளம் உடைந்து வயலுக்குள் தண்ணீர் புகுந்ததால் 500 ஏக்கர் வாழை பயிர்கள் நீரில் முழ்கின.
ஏர்வாடி அருகே உள்ளது சிறுமளஞ்சி என்ற திருவேங்கடநாதபுரம். இங்குள்ள பெரிய குளம் கடந்த வாரங்களில் பெய்த பலத்த மழையால் நிரம்பியிருந்தது.
அதன் மடைப்பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு குளத்து நீர் முழுவதும் வயல்களில் பாய்ந்தது.
இக்குளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த குளத்து பாசனத்தை நம்பி இப்பகுதியிலுள்ள பல ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் செலவில் இந்த மடையை பொதுபணித்துறை அதிகாரிகள் சரி செய்திருந்தனர்.
இருந்தும் மடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை முதலே தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. தகவலறிந்ததும் ராதாபுரம் தாசில்தார் திருமணி, பொதுப்பணிதுறை பொறியாளர்கள் காமராஜ், மகாராசன் ஆகியோர் குளப்பகுதிக்கு வந்து மடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க மணல் மூடைகளை வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குளம் உடைந்ததால் 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்து விட்டன.












Click it and Unblock the Notifications