மதுரை, தூத்துக்குடியில் 4,500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை: மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து கடத்தவிருந்த 4,500க்கும் மேற்பட்ட மூட்டைகள் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் 2,000 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்:
மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஜவஹருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் தனித்துறை கலெக்டர் தலைமையில் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கூடல்நகருக்கு அடுத்துள்ள பாசிங்காபுரத்தில் ஒரு தனியார் அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.
அந்த அரிசி கிட்டங்கியில் 1,086 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர வெளிமாநிலங்களுக்கு லாரியில் ஏற்றப்பட்ட 150 மூடை ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி ஆலையின் உரிமையாளர் சந்திரசேகரன் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
இதேபோன்று பாசிங்காபுரத்தையடுத்துள்ள குமாரத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் இதேபோன்று லாரியில் ஏற்றப்பட்ட நிலையில் 104 மூட்டை ரேஷன் அரிசியும், கிட்டங்கியில் 828 மூட்டை ரேஷன் அரிசி, 15 சர்க்கரை மூட்டைகள், 2 கோதுமை மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாரி கிளீனர் பாடி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிமாநிலங்களுக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.
தூத்துக்குடியில் 2,500 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்:
தூத்துக்குடியில் கப்பல் மூலம் கொழும்புவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார், குடிமைப் பொருள் அதிகாரிகளுடன் சேர்ந்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான கிட்டங்கியை சோதனை செய்தனர்.
அங்கு 2,500 மூட்டைகள் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் இன்னும் ஓரிரு தினங்களில் கப்பல்கள் மூலம் கொழும்புவுக்கு கடத்தவிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த அரிசி குடோனில் இருந்து 2,500 மூட்டைகள் ரேஷன் அரிசியையும், அங்கிருந்த 4 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் இரண்டு மாவட்டங்களில் அதிகளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications