3 ஆண்டுகளில் 26% நேரத்தை வீணடித்த எம்.பிக்கள்!
டெல்லி: கூச்சல், குழப்பம், அமளி, வெளிநடப்பு உள்ளிட்டவை மூலம்் கடந்த 3 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் 26% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலை என்ற தலைப்பில் சோம்நாத் சாட்டர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் மக்களின் வரிப்பணம் அடங்கியுள்ளது.
ஒரு நிமிடம் வீணானால் அரசுக்கு ரூ. 26,000 பணம் வீணாகிறது. இது அரசின் பணம் அல்ல, மக்களின் வரிப்பணம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
14வது லோக்சபாவின் கடந்த 3 ஆண்டு கால பணி நேரங்களில் 26 சதவீத நேரம் அமளிகள், வெளிநடப்புகள், கூச்சல், குழப்பங்கள் போன்றவற்றால் வீணடிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எவ்வளவு மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மொத்தம் 73 மணி நேரம் வீணடிக்கப்பட்டது. அடிக்கடி உறுப்பினர்கள் செய்த இடையூறுகளால் இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த கூட்டத் தொடரின்போது 40 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டது. ராஜ்யசபாவில் 49 சதவீத நேரம் வீணானது. இந்தக் குழப்பங்கள் காரணமாக நிறைவற்றத் திட்டமிடப்பட்டிருந்த 25 மசோதாக்களில் 11 மட்டுமே நிறைவேறியது.
கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் 124 மணி நேரம் லோக்சபா நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 65 மணி நேரம் மட்டுமே நடந்தது.
இப்படி மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொள்வதால் எவ்வளவு மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் ரூ. 26,000 மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறோம்.
எதற்கெடுத்தாலும் கூச்சலிடுவது, இடையூறு செய்வது, வெளிநடப்பு செய்வது, சபாநாயகர் இருக்கை முன்பு வந்து கூச்சலிடுவது என்ற நடைமுறை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றார் சாட்டர்ஜி.












Click it and Unblock the Notifications