நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியவுடன் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடைபெறும்.
இந்தக் கூட்டத் தொடரில் நந்திகிராம் பிரச்சினையை பெரிதாக எழுப்ப பாஜக தீர்மானித்திருந்தது. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினைக்கு நிகரானது நந்திகிராம் பிரச்சினை என பாஜக தலைவர் அத்வானி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
எனவே இந்த கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம், ராமர் பாலப் பிரச்சினை, தீவிரவாதிகள் அதிகரிப்பு, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் அணலைக் கிளப்பும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
லோக்சபா ஒத்திவைப்பு:
கூட்டம் தொடங்கிய முதல் நாளான இன்று லோக்சபாவில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் விஜய் காண்டேல்வால் (லோக்சபா), ஜனா. கிருஷ்ணமூர்த்தி (ராஜ்யசபா), எஸ்.ஆர்.பொம்மை, எல்.எம்.சிங்வி மற்றும் ஜகதீஷ் பிரசாத மாத்தூர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபா நாளை வரை ஒத்திவைப்பு:
இதே போல் ராஜ்யசபாவிலும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாளை காலை 11 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.