19ம் தேதி முதல் மயிலை- வேளச்சேரி பறக்கும் ரயில்
சென்னை: மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் போக்குவரத்தை முதல்வர் கருணாநிதி 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை நகரின் தென் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக மயிலாப்பூர் வரை பறக்கும் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2வது கட்டமாக இந்த ரயில் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வேளச்சேரி வரை இந்த போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் திருவான்மியூர் முதல் வேளச்சேரி வரையிலான பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து 2 முறை இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது போக்குவரத்து இந்த ரயில் பாதை தயாராகி விட்டது.
இதையடுத்து வருகிற 19ம் தேதி முதல்வர் கருணாநிதி இந்தப் புதிய பாதையில் போக்குவரத்ைதத் தொடங்கி வைக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அன்று மாலை 5 மணியளவிலே வேளச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார். ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் இனிமேல் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்கு 35 நிமிடங்களில் செல்ல முடியும். இந்த பறக்கும் ரயில் திட்டம், டைடல் பூங்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.