மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரா?-கம்யூ கேள்வி
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட முதல்வர் எடுத்துவரும் முயற்சியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழக அரசு ஏற்கனவே அரசு நிறுவனங்களுக்கும், வாகனங்களுக்கும் தலைவர்கள் பெயர்களை சூட்டக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது. ஆனால் தற்போது மதுரை விமான நிலையத்திற்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதனை தமிழக அரசு கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோன்று வன்கொடுமை சட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று கூறியதையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசின் 1 கிலோ அரிசி 2 ரூபாய், இலவச வீட்டுமனை பட்டா, 2 ஏக்கர் நிலம் போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதில் இடைத் தரகர்கள் தலையீட்டால் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போகிறது.
சேது சமுத்திர திட்டம் தமிழக மக்களின் 150 வருட கால கனவுத்திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தை ராமர் பெயரை சொல்லி சிலர் தடுக்கப் பார்க்கிறார்கள்.
மதவாத சக்திகள் தென் தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக நீதிமன்றங்கள் மூலம் தடை உத்தரவு வாங்குகிறார்கள். ஆனால் மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை நாசப்படுத்தினால் வரலாறு மோசமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications