8 மாவட்டங்களில் குழந்தைகள் மறுவாழ்வு இல்லங்கள்
திருநெல்வேலி: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த விழாவில் மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித் தொகை அனுமதி ஆணையை அமைச்சர் பூங்கோதை வழங்கிய பின் அவர் பேசியதாவது,
மனவளர்ச்சி குன்றியவருக்கு உதவிகள் செய்யும் நிகழ்ச்சிகள் மன நிறைவை தருகிறது. மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று எண்ணி பார்க்க வேண்டும்.
கை, கால் ஊனமுற்றோர் தனது நிலையை உணர முடியும். ஆனால் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தங்கள் நிலையை உணராதவர்கள். தற்போது உதவித் தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 31,000 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த பெருமை முதலமைச்சர் கருணாநிதி அவர்களைத் தான் சேரும்.
ஊனமுற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நெல்லை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்படுகிறது. இந்த மையத்துக்காக ரூ.25 கோடி செலவு செய்யப்படுகிறது என்று கூறினார்.