திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது.
கடந்த 10ம் தேதி முதல் தினமும் யாக சாலை பூஜை களும், ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் கிரி வீதி உலாவும் நடைபெற்றன.
சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
இன்று மாலை நடக்கவிருக்கும் சூரசம்ஹாரத்தின் போது சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. சம்ஹாரம் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர்.
அங்கு சூரனை வதம் செய்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கிரி வீதிகளில் உலா வந்து சுவாமி கோவிலை அடைந்த பிறகு அங்கு சாயாபிஷேகத்திற்கு பின்னர் சஷ்டி பூஜை தகடுகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
இது தவிர தமிழகத்தின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, பழநி, பழமுதிர்சோலை, சுவாமிமலை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் சம்ஹாரம் காண குவிந்தனர்.
இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இந்த திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், திருச்செந்தூர் நகராட்சி மற்றும் போலீசார் சார்பில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது..
திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழா இன்று கொடியேற்றம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று காலையில் சாமி சன்னதி முன் உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார் பெரியபட்டம் சாமிநாதகுருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் கொடியேற்றி வைத்தனர்.
விழாவில் பிச்சாண்டி எம்.எல்.ஏ, நகர்மன்ற துணைதலைவர் செல்வம், கலெக்டர் சத்யபிரதசாகு, கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications