வாசனால் உயிருக்கு ஆபத்து: விஷ்ணுபிரசாத் புகார்
சென்னை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அடியாட்களுடன் அவர் கொல்ல முயன்றார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் மனு கொடுத்துள்ளார்.
நேற்று மாலை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனை நேரில் சந்தித்து இதுதொடர்பாக மனு ஒன்றைக் கொடுத்தார் விஷ்ணுபிரசாத். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அவரைப் போய் மருத்துவமனையில் பார்க்காமல், ஏராளமான அடியாட்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் ஜி.கே.வாசன்.
என்னைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரையும் அவர் கூட்டி வந்திருந்தார். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே வாசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார் தாக்கப்பட்ட பின்னர் அவர் தன்னை வெளியிலிருந்து வந்த சிலர் தாக்கி விட்டதாகத்தான் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். எனது பெயரை அவர் குறிப்பிடவே இல்லை.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அடியாட்களுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த வாசன், என்னைத் தீர்த்துக் கட்டி விடுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் நான் பத்திரமாக வேறு வழியாக வெளியேறி விட்டேன். இல்லாவிட்டால் நான் அன்றே கொலை செய்யப்பட்டிருப்பேன் என்றார் விஷ்ணுரபிரசாத்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வாசன்தான் அடிப்படை காரணம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அனைத்தும் சரியாகி விடும் என்றார் விஷ்ணுபிரசாத்.
இதேபோன்ற புகாரை அண்ணா சாலை காவல் நிலையத்திலும் விஷ்ணுபிரசாத் கொடுத்தார். ஆனால் புகாரை போலீஸார் பதிவு செய்யவில்லை. மாறாக பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை மட்டும் கொடுத்தனர்.