சைதை வில்லியம்ஸ் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 11ம் தேதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணுபிராசாத் உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பிரசாத்தின் ஆதரவாளரும், ஜெயக்குமாரால் பதவி நீக்கப்பட்டவருமான சைதை வில்லியம்ஸ் மற்றும் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சைதை வில்லியம்ஸ் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் ஒரு அப்பாவி. போலீசார் தவறாக என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதனால் எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சைதை வில்லியம்சுக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் வழக்கு குறித்த ஆவணங்களை அழிக்க முயற்சி செய்வார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளி விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை கைது செய்ய 2 வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.