காவிரியில் அபாயகர அளவில் நச்சுப் பொருட்கள்
மேட்டூர்: காவிரி ஆறு பெருமளவில் நச்சுப்பட்டு வருவதாகவும், காவிரி ஆற்றில் தற்போது 28 வகையான நச்சு வேதிப் பொருட்கள் உள்ளிட்ட 52 வகையான அபாயகர மாசுப் பொருட்கள் கலந்திருப்பதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய நதி காவிரி. நடந்தாய் வாழி காவிரி என்று பாராட்டப்படும் காவிரி, தமிழகம் மற்றும் கர்நாடக மக்களால் சீராட்டப்படும் நதி.
தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் ஜீவாதார நதியாக விளங்கும் காவிரி இப்போது சீரழிந்து வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றும் நதியாக விளங்கும் காவிரி, இப்போது நச்சுப் பொருட்களின் அடைக்கல பூமியாக மாறி விட்டதாக சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
செம்பிளாஸ்ட் நிறுவனத்தால் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களால் காவிரியும், மேட்டூர் பிராந்தியமும் எந்த அளவுக்கு மாசுபட்டுள்ளது, எவ்வளவு பெரிய ஆபத்தை அவை சுமந்து நிற்கின்றன என்பதை இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
மேட்டூர் மற்றும் சுற்றுப் பகுதியில் நச்சுத்தன்மை அதிகரித்து விட்டது. டையாக்ஸின்கள், ப்யூரான்கள் உள்ளிட்ட 52 வகையான நச்சுப் பொருட்கள் மேட்டூரை நச்சுத்தன்மை கொண்ட பூமியாக மாற்றியுள்ளது.
மேட்டூர் பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களில் நச்சுத்தன்மை அதிகரித்து விட்டது. காவிரி ஆற்றிலும் நீர் மாசுபட்டுள்ளது. மேட்டூர் சுற்றுப் பகுதியில் பூமியையும், நீரையும் இந்த நச்சுப் பொருட்கள் கெடுத்துள்ளன.
இந்த திடுக்கிடும் ஆய்வைத் தொடர்ந்து, கோணூர் விவசாயிகள் நலச் சங்கம், மேட்டூரை மிகவும் மாசடைந்த பகுதியாக அறிவிக்கக் கோரியுள்ளது.
செம்பிளாஸ்ட் நிறுவனம் 28 வகையான நச்சுப் பொருட்களை காவிரி ஆற்றில் கலப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஐந்து கார்சினோஜென் வேதிப் பொருளும் அடக்கம்.
இவற்றில் வினைல் குளோரைடு, குளோரெத்தில்-2, 1,2 டைகுளோரீத்தேன், 1,2 டைகுளோரோ பென்சீன் ஆகியவை அபாய அளவையும் தாண்டி நீரையும், பூமியையும் மாசுபடுத்தியுள்ளன.
இந்த 52 வகையான நச்சு வேதிப் பொருட்களால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுகாதார சீரழிவும் ஏற்படும் என இந்த அறிக்கையை ஆய்வு செய்த பொது சுகாதார நிபுணர் ராக்கேல் கைடோண்டே கூறியுள்ளார்.
இந்த மாசால் மிகப் பெரிய பின்விளைவுகளும், பேராபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சுற்றுச்சூழல், நீராதாரம், உணவு மற்றும் உயிர்களுக்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
டையாக்சின்களால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படுமாம். மேலும் மனிதர்களிடையே இது உயிரணுக்களையும் பாதிக்கும் என்பதால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். குழந்தைப் பிறப்புக்கே உலை வைக்கும் வகையிலான ஆபத்தைக் கொண்டவை டையாக்சின்கள்.
இந்த ஆய்வு குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர கவனம் செலுத்தி, மேட்டூரில் உள்ள வேதிப் பொருள் நிறுவனங்களிலிருந்து வெளியாகும் மாசுக்களில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வேதி நிறுவனங்களிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கூட நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளதாகவும், இவற்றை காவிரியில் விடுவதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆழ்துளை கிணறுகளும், ஆறும் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
சமீபத்தில் செம்பிளாஸ்ட் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு ஆற்றிய பங்கை விளக்கும் அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டார். அது வெளியாகி 2 நாட்களில் இப்படி ஒரு பயங்கர தகவல்கள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அதுவும், செம்பிளாஸ்ட் நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அறிக்கை வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வின்போது, செம்பிளாஸ்ட் நிறுவனத்தின் சன்மார் பிவிசி தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் மாதிரி, நிலத்தடி நீர், மண், பிற கழிவுகள் உள்ளிட்ட 9 மாதிரிகளிலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications