அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
திருவள்ளூர்: அதிமுக பிரமுகர் அம்பத்தூர் ரவி படுகொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் தப்பி ஓடிவிட்டார்.
சென்னை அம்பத்தூர் நகர அதிமுக செயலாளராக இருந்தவர் எம்.ஆர்.ரவி. ரியல் எஸ்டேட் பிசினஸையும் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த ரவி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், முகப்பேர் ஏ.ராஜா உள்ளிட்ட 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
முக்கியக் குற்றவாளியான ராஜா முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா தப்பி ஓட்டம்:
இந் நிலையில் ராஜா உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதற்கிடையில் ராஜா தனக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த ராஜா தப்பிவிட்டார். ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.