வங்கியில் கள்ளநோட்டு தந்த நாதஸ்வர வித்வான் கைது
நாகர்கோவில்: அடகு வைத்த நகையை மீட்பதற்காக கள்ளநோட்டை வங்கியில் செலுத்த முயன்ற நாதஸ்வர வித்வானை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள பண்டார தோப்புப் பகுதியை சேர்ந்தவர் சத்யா. நாதஸ்வர கலைஞரான இவர் தனது நகையை பார்வதிபுரத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு அடகு வைத்திருந்தார்.
அடகு வைத்த நகையை திருப்புவதற்காக சத்யா பணத்துடன் வங்கிக்கு சென்றார். வங்கியில் பணத்தை செலுத்த முயற்சிக்கையில் சத்யா கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் மீது வங்கி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு மேலாளரிடம் காட்டி தனது சந்தேகத்தைக் கூறினார்.
வங்கி மேலாளருக்கும் சத்யா கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் வரவே அவர் மற்றொரு வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்தார். முடிவில் சத்யா கொண்டு வந்த பணத்தில் 500 ரூபாய் தவிர மீதியிருந்த ரூ.12,000 கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
சத்யாவிடம் கள்ள நோட்டுகள் எப்படி வந்தது, கள்ளநோட்டு கும்பலுடன் சத்யாவுக்கு தொடர்பு உண்டா, அவர் அப்பாவியா என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications