உண்ணாவிரதம் இருந்த 18 கைதிகள் மருத்துவமனையில்
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளரை மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 18 பேர் இன்று மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தனை மாற்றக் கோரி கடந்த நாட்களாக கைதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் பலர் மயக்கமடைந்து விழுந்தனர்.
மயக்கமடைந்த கைதிகளை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கைதிகள் மயக்கமடைந்த தகவல் கிடைத்து, அந்த கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து எஸ்.பி. சாயாசர்மா தர்ணா போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து சிறைக்குள் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மேலும் சில கைதிகள் மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 18 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஜம்பு, ரவி ஆகிய 2 பேருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவல்துறை உயரதிகாரிகள் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications