சிபிஐ விசாரணைக்கு தயார்-ஜெ. சவாலை ஏற்றார் அமைச்சர் வேலு
சென்னை: ரூ. 10 கோடி மதிப்புள்ள ரேசன் அரிசிக் கடத்தல் நடந்தது அதிமுக ஆட்சியில் என்று வங்கி ஆவணங்களை சுட்டிக் காட்டி விளக்கம் வெளியிட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் வேலு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தயார் என்றும் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு பிடிபட்ட அரிசி திமுக ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டது அல்ல என்றும், முன்பிருந்த அதிமுக ஆட்சியில் கடத்தப்பட்ட அரிசி என்றும் நான் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அனந்தம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ஓர் ஆண்டுக்கு முன்பாகத் தான் அரிசிக் கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
ஓராண்டுக்கு முன்பு என்றால் எந்தத் தேதியில் என்று சொல்ல வேண்டாமா?. ஜே.ஆர். டிரேடர்ஸ் என்ற கிடங்குக்கு திமுக அரசின் துணையோடு தான் அரிசி கொண்டு வரப்பட்டிருக்கும் என்று சந்தேகத்தோடு அறிக்கை விட்டிருக்கிறார். இதில் இருந்தே உண்மையை சரியாக தெளிவாக்க முடியாமல் நுனிப்புல் மேய ஜெயலலிதா முனைந்துள்ளார் என்பது தெளிவாகிறது அல்லவா?
அது மாத்திரமல்ல, கடத்தப்பட்ட அரிசியை ஐசிஐசிஐ வங்கியில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது. அந்த வங்கியின் ஆவணங்களை எடுத்துப் பார்த்தாலே எந்த தேதியில் கடன் பெற்றிருக்கிறார்கள் என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
2006ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் நாள் தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றது என்ற நிலையில், 2006ஆம் ஆண்டு மார்ச் திங்களிலேயே கடன் பெற்றிருக்கிறார்கள் என்கிறபோது அந்தத் தேதிக்கு முன்பு அரிசி கடத்தப்பட்டிருந்தால் தானே, அதனை அடமானமாக வைத்திருக்க முடியும்?.
மேலும் வங்கி கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும்போது, அந்த அரிசி கையிருப்பிலே இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமலா கடன் கொடுத்திருக்கும்?.
இந்த உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பதைப் பார்க்கும்போது சிரிக்கத் தான் தோன்றுகிறது.
கடத்தப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது முழு உண்மைகளும் வெளிவரவுள்ளது. எனினும் இதிலே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
இந்த அரசைப் பொறுத்தவரை எங்களுக்கு மடியிலே கனம் இல்லை, எனவே வழியிலே பயம் இல்லை. அவர் கோரியபடியே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ளுமாறு தமிழக அரசின் சார்பில் சி.பி.ஐ. இயக்குநருக்கு கடிதம் எழுதப்படும்.
அந்த விசாரணையின் போது, அரிசி எந்த ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விவரங்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு தெளிவாகும்.
இவ்வாறு கூறியுள்ளார் அமைச்சர் வேலு.












Click it and Unblock the Notifications