புலிகளுடன் தொடர்பு-தமிழர்கள் மறுவாழ்வு அமைப்புக்கு அமெரிக்கா தடை
வாஷிங்டன்: சமூக நல அமைப்பான தமிழர்கள் மறுவாழ்வு அமைப்பின் (Tamils Rehabilitation Organisation-TRO)சொத்துக்களை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்புக்கு புலிகளுடன் தொடர்பிருப்பதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது.
இந்த அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டும் பணியிலும் ஆயுதங்கள் வாங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. எல்டிடிஈ அமைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது.
இந் நிலையில் தமிழர் மறுவாழ்வு மையத்தின் சொத்துக்களையும் முடக்கவுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும், சொத்துக்கள் கைப்பற்றப்படும். மேலும் இந்த அமைப்புடன் தொடர்பு வைக்க அமெரிக்கர்களுக்கும் தடை விதிக்கப்படும்.
அமெரிக்காவில் தனி நபர்கள் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்த அமைப்பு நிதி திரட்டிக் கொடுத்துள்ளதாகவும் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்கவும் புலிகள் இயக்கத்திற்கு இந்த அமைப்பு உதவியுள்ளதாகவும் அந் நாட்டு நிதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் ஆயுதங்கள், வெடிபொருட்கள், கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், பிற தொழில்நுட்பங்களை இந்த அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவிலிருந்து அனுப்பியுள்ளதாகவும்,
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியையும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்த அமைப்பு வழங்கியுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
கிளிநொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த மறுவாழ்வு மையம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 17 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.