சீசன் தொடங்கியது: சபரிமலை கோவில் திறப்பு
பத்தனம்திட்டா: 41 நாள் மண்டல விழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், 41 நாள் மண்டல பூஜை விழாவையொட்டி அய்யப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்வரு முன்னிலையில் ஓய்வு பெறும் மேல் சாந்தி (தலைமை பூசாரி) ஈஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையைத் திறந்தார். பின்னர் பாரம்பரிய குத்துவிளக்கை அவர் ஏற்றினார்.
அதன் பின்னர் 18 படிகள் வழியாக கீழிறங்கிச் சென்ற அவர் அங்குள்ள ஆழித் தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
பின்னர் புதிய மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரியை தந்திரி கண்டரரு மகேஷ்வரு நியமித்தார். அதன் பின்னர் கலசபூஜையைச் செய்த தந்திரி, மேல்சாந்தியின் காதில் அய்யப்பனின் மூல மந்திரத்தை உச்சரித்தார்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு வழக்கமான பூஜைகள் தொடங்கின. முதலில் நிர்மால்ய தரிசனம், பின்னர் கணபதி பூஜை நடைபெற்றது. அதன் பிறகு நெய்யாபிஷேகம் நடந்தது. காலை 7. 30 மணியளவில் உஷ காலை பூஜை நடத்தப்பட்டது. உச்சி கால பூஜை 12.30 மணிக்கு நடைபெறும். 1 மணிக்கு நடை மூடப்படும்.
சபரிமலை கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கியுள்ளன. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.
நேற்று மாளிகைபுரம் தேவி கோவில் நடையும் திறக்கபப்ட்டது. கோவில் மேல்சாந்தி மதுசூதன் பொட்டி கருவறையைத் திறந்தார்.
பின்னர் புதிய மேல் சாந்தியாக கிருஷ்ணன் நம்பூதிரி நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications