நெப்போலியன் தனிக் கட்சி திட்டம் ஒத்தி வைப்பு?
சென்னை: நடிகர் நெப்போலியனின் தனது பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழாவை திடீரென ரத்து செய்துவிட்டார்.
திமுகவில் உள்ள நெப்போலியன் அக் கட்சியின் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வந்தாலும் அதை அவர் மறுத்து வருகிறார். நெப்போலியனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என அவரது ரசிகர் மன்றத்தினர் ஆங்காங்கே குரல் எழுப்பி வருகின்றனர்.
இந் நிலையில் தனது பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா நடத்த இருந்தார் நெப்போலியன். ஆனால், இந்த விழாவில் அவர் தனிக் கட்சி தொடங்கப் போவதாக பேச்சு எழுந்தது. இந் நிலையில் அந்த விழாவையே ரத்து செய்துள்ளார் நெப்போலியன்.
நெப்போலியன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலத் தலைமை மன்ற நிர்வாகிகளான நாங்கள் நெப்போலியனின் பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதியன்று , ரசிகர் மன்றத்தின் 15வது ஆண்டு விழாவையும் சேர்த்து நடத்த அனுமதி பெற்றோம்.
நெப்போலியன் அனுமதித்ததன்பேரில் ரசிகர் மன்றத்தின் 15வது ஆண்டு விழா, பிறந்தநாள் விழா மற்றும் ஜீவன் பவுண்டேஷன் சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக, பிரம்மாண்டமாக நடத்திட திட்டமிட்டிருந்தோம்.
இந்த நிகழ்ச்சியை பற்றிய அனைத்து திட்டங்களையும் அமைதியான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியை திசை திருப்பும் வகையில் நிகழ்ச்சி பற்றிய தவறான செய்திகளை சிலர் பரப்பி விட்டுள்ளனர்.
அதில் நெப்போலியன் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற கட்சியில் சேர போவதாகவும் பல வதந்திகளை பரப்பி நெப்போலியனை சிக்கலில் தவிக்க விட்டுவிட்டர்கள். அவர் ஓர் இயக்கத்தை சார்ந்தவர். அவர் சார்ந்த இயக்கத்திற்கும், தலைவருக்கும், தளபதிக்கும் (ஸ்டாலின்) விசுவாசமாக இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இதை திசை திருப்பும் வகையிலும், கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் வதந்திகள் பரவி வந்ததால் நெப்போலியன் விழாவை தவிர்க்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டது.
ஆகையால், அண்ணன் நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன், இந்த விழாவினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட தலைமை மன்றத்தின் சார்பில் ஏழை எளியோர்க்கு உதவிடும் வகையில் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சென்னையில் நடைபெறவிருந்த முப்பெரும் விழா ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications