அதிமுக பிரமுகரிடம் போலீஸ் விசாரணை: நெல்லையில் கடைகள் அடைப்பு, ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: திருட்டு நகை வாங்கியது தொடர்பான வழக்கில் போலீஸ் விசாரணைக்காக அதிமுக பிரமுகர் அழைத்து செல்லப்பட்டத்தை கண்டித்து நெல்லையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி, வடக்கு ரத வீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் கணேசன். இவர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். கடந்த 14ம் தேதியன்று வி.கே புரம் போலீசார் திருட்டு நகை வாங்கியது தொடர்பாக கணேசனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து 2 நாட்களுக்கு முன் நெல்லை நகரில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு கணேசன் விடுவிக்கப்படுவார் என்று உறுதி கூறினர்.
ஆனால் இன்றுவரை அவர் விடுவிக்கப்படாததால் நெல்லை டவுன் நகைக் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கூலக்கடை பஜார், மேலரத வீதி, வடக்கு ரத வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தால் 200 நகைக்கடைகள் உட்பட 500 மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதனிடையே நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.செல்வகுமார் தலைமையில் அதிமுகவினர், கணேசனை விடுவிக்கக் கோரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீதரிடம் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications