வைகோ, நெடுமாறன் ஜாமீனில் விடுதலை
சென்னை: தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தி கைது செய்யப்பட்ட வைகோ, நெடுமாறன் உட்பட 262 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் குண்டுவீசி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சென்னையில் கடந்த 12ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் இரங்கல் ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலத்திற்கு போலீஸ் அனுமதி தர மறுத்ததால், தடையை மீறி ஊர்வலம் நடத்திய வைகோ, நெடுமாறன் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக மீண்டும் மதிமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனு மாஜிஸ்திரேட் முருகானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பாக மதிமுக வழக்கறிஞர்கள் நன்மாறன், தேவதாஸ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மனுதாரர்களுக்கு ரூ.5,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு ஒரு நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிட்டதுடன், கைதான 262 பேருக்கும் உத்தரவாதம் வழங்க மொத்தம் 100 பேர் இருந்தால் போதும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று வைகோ, நெடுமாறன் உட்பட 262 பேரும் புழல் மத்திய சிறையில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழர்களை மிரட்டும் கருணாநிதி- வைகோ:
சிறையிலிருந்து வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு அமைதியான முறையில் இரங்கல் ஊர்வலம் நடத்தவிருந்த எங்களை கைது செய்து கருணாநிதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ஆனால் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கருணாநிதி மட்டும் இரங்கற்பா பாடலாம். அதைப்பற்றி கேட்டால் என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் என்று விளக்கம் சொல்கிறார்.
அப்படியென்றால் நாங்கள் தமிழர்கள் கிடையாதா. அவர் மட்டும் தான் தமிழரா. நாங்கள் இரங்கல் தெரிவித்தால் சிறையில் அடைப்பாராம். ஒரு தமிழனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தமிழர்களை கருணாநிதி மிரட்டுகிறார்.
கைது செய்யப்பட்ட எங்களை இந்த அரசு விடுதலை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் நாங்கள் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றுள்ளோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications