ராகுலை கடத்த வந்த ஜெ.இ.எம் தீவிரவாதிகள்
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியை கடத்த சதி செய்த பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவாதிகள் மூவர் பிடிபட்டுள்ளனர்.
லக்னோ-டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று அசுர வேகத்தில் ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்த போலீசார் கையை காட்டியபோதும் கார் நிற்காமல் சென்றுள்ளது.
அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே துப்பாக்கியால் காரில் இருந்தவர்களை நோக்கி சுட்டவுடன் கார் நிறுத்தப்பட்டு காருக்குள் இருந்த மூன்று பேர் சரணடைவது போல கைகளை தூக்கிக் கொண்டு இறங்கினர்.
போலீசார் வர்களை கைவிலங்கிட்டு அவர்களையும், அவர்கள் வந்த காரையும் சோதனை செய்தனர். காருக்குள் 2 ஏகே 47 துப்பாக்கிகள், 3 நவீன பிஸ்டல்கள், 4 கிலோ ஆர்டிஎக்ஸ் உட்பட ஏராளமான வெடிபொருட்கள் இருந்தன.
காரில் இருந்த முகமது அபித், யூசுப் என்ற பைசல் மற்றும் மிர்சா ரஷீத் பெய்க் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷ்-இ-முகம்மத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி உட்பட 2 பேரை கடத்துவதற்காக வந்ததாகவும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அவர்கள் மூவரும் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மூவரும் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர்கள் என்றும், காஷ்மீரில் தான் தீவிரவாத செயல்களுக்காக பயிற்சி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
ராகுல் காந்தியை கடத்தி வைத்துக்கொண்டு நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 42 தீவிரவாதிகளை விடுதலை செய்ய சொல்வதற்காக இந்த திட்டத்தை தீட்டியதாகவும் கூறியிருக்கிறார்கள்.
தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது குறித்து டிஜிபி விக்ரம் சிங் கூறியதாவது,
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக ராகுல் காந்தி அடிக்கடி வருகிறார். கடுமையான பாதுகாப்பு இருக்கும் டெல்லியை விட, உ.பியில் அனைத்து இடங்களுக்கும் செல்லும் ராகுலை எளிதாக கடத்திவிடலாம் என்று தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருக்கலாம்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் ராகுலைத்தான் கடத்த வந்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.
உ.பிக்கும் பலமுறை வந்துள்ள இவர்கள் 3 பேரும் இங்குள்ள ஒரு கட்சி அலுவலகத்தில் வேலைக்கு சேர முயற்சி செய்துள்ளனர்.
அதன்மூலம் கட்சிக்காரர்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தால் எளிதில் தங்கள் திட்டம் நிறைவேறிவிடும் என்று நினைத்துள்ளனர்.
ஆப்கன், பாகிஸ்தானில் பயிற்சி:
கைது செய்யப்பட்ட 3 பேரில் முகமது அபித், மிர்ஷா பெய்க் ஆகிய இரண்டு பேர் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள். பைசல் மட்டும் பாகிஸ்தானில் உள்ள பால்கோட்டில் பயிற்சி பெற்றவன் என்றார்.












Click it and Unblock the Notifications