மோசமான சட்டம்-ஒழுங்கு: திமுகவுக்கு விஜயகாந்த் 'நூற்றுக்கு நூறு'
சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதில் ஆளும் திமுக அரசுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
நாங்கள் கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் தேர்தலை சந்தித்து பெருவாரியான வாக்குகள் பெற்றிருக்கிறோம்.
தனியாகவே போட்டியிட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை நாங்கள் பெற முடியும். எதையும் தாக்குப் பிடிக்கும் தைரியமும், பொறுமையும் எங்களுக்கு இருக்கிறது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சி என்பதால் நிச்சயம் தனித்து நின்று எங்களால் வெற்றி பெற முடியும்.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு மாற்றாக மக்கள் தேமுதிகவை நினைக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்க விரும்புகிறேன்.
திமுக மற்றும் அதிமுகவின் முறைகேடுகளையும் அராஜகத்தையும், மக்கள் விரோத போக்கையும் எதிர்க்கும் நாங்கள் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள்.
திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை நான் எதிர்ப்பதில்லை என்று சொல்கிறார்கள். திமுக தான் ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இல்லை. ஆட்சியாளர்களின் குறைகளைத் தான் சுட்டிக்காட்ட முடியும். எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன பயன்.
மக்கள் அதிமுகவை தண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி விட்டார்கள். எதற்கெடுத்தாலும் அவர்கள் ஆட்சியில் நடந்தது என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும். 50 வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பயன்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குறை கூறிய திமுக முறையாக நகராட்சி தேர்தலை நடத்தியதா. மக்களை வாக்களிக்க அனுமதித்தார்களா. மக்களின் பார்வையில் இரு கட்சிகளுமே ஒன்று தான்.
இந்த அரசு உருப்படியாக எந்த திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு என்று சொல்லி அவர்களது கட்சிக்காரர்கள் வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழி செய்ததும், இலவச கலர் டி.வி. என்ற பெயரில் கட்சிக்காரர்கள் அரசு தரும் டி.வி.க்களை விற்று சம்பாதிக்க வழி வகுத்ததும்தான் இந்த அரசின் சாதனை.
இதே போல இலவச கியாஸ் அடுப்பு இன்னொரு மோசடி திட்டம். பாவம் ஏழைகள். மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கேஸ் சிலிண்டர் வாங்க ரூ.300க்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். எதையுமே உருப்படியாக செய்வதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.
தெளிவில்லாத, குறிக்கோள் இல்லாத ஆட்சி ஒன்று இருக்குமானால் அது இந்த ஆட்சிதான்.
இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதற்கு வேண்டுமானால் இந்த ஆட்சிக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுத்தே தீர வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்த ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பும் கோபமும் என்னிடமும் உண்டு.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குகிறார்கள். அவர்களது கட்சி மாவட்ட செயலாளரே வெட்டிச் சாய்க்கப்படுகிறார். இதுதான் இந்த ஆட்சியின் சாதனைகள்.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன். நமது உள்ளாட்சித்துறை அமைச்சர் எதற்காக பாங்காக் போனார். இத்தனை பத்திரிக்கைகள் கேட்கின்றன, யூகங்கள் எழுகின்றன. ஏன் பதில் சொல்ல மறுக்கிறார். முதல்வருக்கு தெரிந்து போனாரா, தெரியாமல் போனாரா. தனிப்பட்ட பயணமாகப் போனாரா. பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் எங்கே போனார், எதற்காக போனார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் என்னைப்பற்றி பேசியதற்காக அவர்மீது கோபப்படுவதைவிட நான் பரிதாபப்படுகிறேன். அரசியலில் மார்கெக்ட இழந்தால்தான் அவரது தந்தை சினிமாவில் கண்ணம்மா, பாசப்பறவைகள் என்று கதைவசனம் எழுதினாரா என்று கேட்பதற்கு எவ்வளவு நேரமாகும்.
எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. ஆனால் இப்படி மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்களே என்ற ஆதங்கம் இருக்கிறது என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications