பெரம்பலூர் அருகே மான் வேட்டை-இருவர் தப்பியோட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இருவர் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, நெற்குணம், பாண்டகப்பாடி, பிள்ளங்குளம், போன்ற பல பகுதிகளில் பரந்து விரிந்துள்ளன காடுகள். இங்கு ஏராளமான மான்கள் உள்ளன.
மான் மற்றும் காட்டு விலங்குகள் குடிநீருக்காக கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும். இந்த நேரங்களில் சிலர் அந்த விலங்குகளை வேட்டையாடி விடுவது தொடர்ந்து வருகிறது.
வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் ரோந்து போன நேரத்தில் இருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளனர்.
ரோந்து வந்த போலீசாரை பார்த்த அவர்கள் எதையோ கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். போலீசார் சென்று பார்த்ததில் அவர்கள் மான் ஒன்றை வேட்டையாடியது தெரிய வந்தது. வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் பயத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. வேட்டையாடிய மானையும், நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஒடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications