மதுரையில் திமுக பகுதி செயலாளர் மகன் படுகொலை
மதுரை: மதுரையில் முன் விரோதம் காரணமாக திமுக பகுதி செயலாளரின் மகன் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் முருகன் 8ம் பகுதி திமுக செயலாளராக இருக்கிறார். இவரது மகன் முத்துக்குமார்(24).
இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மேல அனுப்பானடி பகுதியில் தனது உறவினர்களுடன் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரபாண்டி தரப்பினர் முத்துக்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர்தரப்பை சேர்ந்த வீரபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் படுகாயமடைந்தனர்.
போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில்,
கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் சாவுக்கு காரணமான முத்து என்பவருக்கு தனது தந்தையின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அவர் தலைமறைவாக இருக்க உதவியதற்காக முத்துக்குமாரை எதிர்தரப்பினர் வெட்டிக் கொன்றதாக தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.