தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு-ஜெ
சென்னை: தமிழகத்தில் தொடரும் மின் வெட்டினால் விவசாயம், ஜவுளி உள்ளிட்ட துறைகள் முடங்கி வருவதோடு தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருகிறது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முறையாக வினியோகம் செய்யாமலும், கூடுதல் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமலும் இருப்பதால் ஒரு நாளைக்கு மொத்தம் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், அதுவும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று இடைவெளி விட்டு மின்சாரம் வழங்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், மின் பயனீட்டாளர்கள் அனைவரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
2,500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் காற்று வீசாமல் செயலற்றுப் போனது தான் மின் வெட்டிற்கு அடிப்படைக் காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எட்டு மணி நேரம் மின்சாரம் என்பது விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இதனால் விவசாயம் நசிந்து போவதோடு, விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத சூழ்நிலை உருவாகி இருப்பதால் சிறு தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாக
இருக்கிறது.
மின் வெட்டால் விவசாயிகள் பயன்படுத்தும் மின் மோட்டார்கள் பழுதடைந்தும் வருகின்றன.
மின் அழுத்தக் குறைவு கரணமாக ஆழ்குழாய் கிணறுகளில் இருக்கும் மோட்டார்களின் மூலம் சரியான முறையில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையும் ஏற்பட்டு, பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
விசைத் தறியைப் பயன்படுத்தும் நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் துணி உற்பத்தியை செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மின் தடையின் காரணமாக, ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதோடு, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டை போக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.