அதிமுக நகர செயலாளர் கொலை-போலீசே பொறுப்பு: ஜெயலலிதா
சென்னை: செங்கல்பட்டு அருகே அதிமுக நகர செயலாளர் குமாரும், அவருடைய நண்பரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுகவினரால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று காவல்துறையினரிடம் பலமுறை குமார் புகார் கொடுத்துள்ளார்.
அவற்றை காவல்துறையினர் உதாசீனப்படுத்தியதால், இந்தக் கொடூரச் செயல் இப்போது நடந்துள்ளது. எனவே, இதற்கு காவல்துறையினரே முழு பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு சரிந்து வருவதையே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
படுகொலைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட குமார், ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 கட்சியின் சார்பில் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுகவின் இருவரும் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15,000 வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications