ராமர் பாலத்தை காக்க விஎச்பி-துறவிகள் ரத யாத்திரை
சென்னை: ராமர் பாலத்தை பாதுகாக்க வரும் 20ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நாடு முழுவதும் ராம் சேது' ரத யாத்திரை நடத்தப்படும் என இந்து மடாதிபதிகள்-துறவிகள் பேரவை அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மடாதிபதிகளின் மாநாடு சென்னையில் நடந்தது.
இதில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், ஹரித்துவார் மடாதிபதி ஹன்ஸ்தாஸ்ஜி மகராஜ், பெஷாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி மகராஜ், விஎச்பி தலைவர் பிரவீண் தொகாடியா, ராமர் பால பாதுகாப்புக் குழு ஆலோசகர் கல்யாணராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிருபர்களை சந்தித்த பெஷாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மகராஜ் கூறுகையில்,
ராமர் குறித்தும், ராமாயணம் குறித்தும் முதல்வர் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்துக்களை காயப்படுத்தியுள்ளது. ராமர் குறித்தோ, வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் எழுதிய ராமாயணங்கள் குறித்தோ கருணாநிதியுடன் பொது விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன் என்றார்.
பின்னர் தொகாடியா-கல்யாணராமன் உள்ளிட்டோர் நிருபர்களிடம் பேசுகையில்,
சேது சமுத்திரத்தின் மாற்றுப் பாதை, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆகியவை குறித்து ஒரு குழுவை அமைத்து ஆராந்து வருவதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் குழு அரசுக்கு சாதகமான கருத்தை தெரிவிப்பவர்களைக் கொண்ட ஒருதலைப்பட்சமான குழு ஆகும்.
இந்த குழு தனது அறிக்கை சமர்பிப்பதற்கு முன்பே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ராமர் பாலம் அமைந்துள்ள இடத்திலே தான் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு மத்திய அரசின் குழுவை மறைமுகமாக அச்சுறுத்துவதாக உள்ளது.
ராமர் பாலத்தை பாதுகாக்க நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நாடு முழுவதும் ராம சேது ஷிலா' ரத யாத்திரை நடத்தப்படும்.
ராமர் பாலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மிதக்கும் கல்லுடன் இந்த விழிப்புணர்வு ரத யாத்திரை நடக்கும்.
டிசம்பர் 30ம் தேதி டெல்லி போட் கிளப் மைதானத்தில் மாபெரும் பேரணியும் நடைபெறும்.
ராமர் பாலத்தை மத்திய அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த பிரச்சனையில் நீதித்துறையை நம்புகிறோம். அரசியல்வாதிகளை நம்பத் தயாராயில்லை. எந்த கட்சி, ஆட்சியில் இருந்து ராமர் பாலத்தை இடிக்க முனைந்தாலும் அதை எதிர்த்து போராடுவோம் என்றனர்.












Click it and Unblock the Notifications