டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிமுக, தேமுதிக!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய (குரூப்-2) தேர்வில் அரசியல் கட்சிகளை பற்றிய கேள்விகளும், சில கேள்விகள் தவறான முறையிலும் கேட்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு முழுவதும் நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடைபெற்றது. காலியாக இருக்கும் 986 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாகவும், எப்போதுமில்லாத வகையில் அரசியல் கட்சிகளை பற்றியும் கேள்விகளும் இடம் பெற்றிருந்தன.
அதில் கேட்கப்பட்ட சில கேள்விகள்:
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அங்கீகாரம் இல்லாமல் போட்டியிட்ட கட்சி எது? என்று கேட்கப்பட்டு அதற்கு பாமக, தேமுதிக, டிபிஐ, மதிமுக என்று 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் அஇஅதிமுக முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது?
காட் அமைப்பு எப்போது துவங்கப்பட்டது? என்று கேட்கப்பட்டிருந்தது. காட் ஒப்பந்தம் தான் தவிர அது ஒரு அமைப்பு கிடையாது. (காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இணைந்து தான் சர்வதேச வர்த்தக அமைப்பை (World Trade Organization-WTO) பின்னர் ஏற்படுத்தின என்பது நினைவுகூறத்தக்கது)
அதே போன்று தேசிய கொடியை தயாரித்தவர் யார்? என்று ஒரு கேள்வி. வழக்கமாக தேசியக் கொடியை வடிவமைத்தவர் யாரென்று தான் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.