கோவை, சேலம், திருச்சியை நாடும் பிபிஓ நிறுவனங்கள்
பெங்களூர்: பெங்களூர், சென்னை, மும்பையை விட்டுவிட்டு பிபிஓ நிறுவனங்கள் திருச்சி, சேலம், கோவை, பாண்டிச்சேரி, இந்தூர், துர்காபூர் போன்ற மூன்றாம் நிலை நகர்களில் தங்களது தொழிலை தொடங்க ஆரம்பித்துள்ளன.
முதல் நிலை நகர்களில் பிபிஓ நிறுவனங்களை நடத்த அதிக செலவு பிடிப்பதாலும், மூன்றாம் நிலை நகர்களிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதாலும் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் பெங்களூர், சென்னை, மும்பையை முதல் நிலை நகர்களாகவும், புனே, கொல்கத்தா, ஹைதராபாத் போன்றவற்றை இரண்டாம் நிலை நகர்களாகவும் தரம் பிரித்து வைத்துள்ளன.
மூன்றாம் நிலை நகர்களுக்கு நிறுவனங்களை இடம் மாற்றினால் 20 சதவீதம் வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும் என பிபிஓ நிறுவனங்கள் கருதுகின்றன.
அதே நேரத்தில் இந்த நகர்களில் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. முதல் நிலை நகர்களில் மிகச் சிறந்த ஊழியர்கள் கிடைக்கும் நிலையில் இந்த நகர்களில் ஆங்கில அறிவுடன் கூடிய தொழில்நுட்ப அறிவு நிறைந்த ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.