புல்லட் புரூப் அம்பாஸிடர் காரை பயன்படுத்தாத ஜெயலலிதா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட புல்லட் புரூப் அம்பாசிடர் காரை பயன்படுத்தாமல் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து அவருக்கு தமிழக அரசு புல்லட் புரூப் அம்பாசிடரை வழங்கியது.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விடுதலை கூறுகையில்,
ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக கடந்த 3ம் தேதியே குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தக் காரை ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. அவர் வெளியில் செல்லும்போது அவர் வாகனத்திற்கு பின்னால் குண்டு துளைக்காத கார் சும்மா தான் போகிறது.
அந்த காரை அவர் பயன்படுத்தவில்லை. பாதுகாப்பு விஷயத்தில் அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்க மறுகிறார். இதனால் அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் வீணாகின்றன என்றார்.
இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் கோரினார் அதிமுக வழக்கறிஞர். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்பே அவருக்குத் தரப்பட்ட புல்லட் புரூப் காரை ஜெயலலிதா திருப்பி அனுப்பியதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. அம்பாஸிடர் என்பதால் அதை ஜெயலலிதா பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
இந் நிலையில் இப்போதும் அதே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.