புலிகளுக்கு புகழ் பாடுவதா-கிருஷ்ணசாமி கண்டனம்
சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கச் சென்றபோது முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, ஈட்டியால் குத்தப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி 20 நாள் மருத்துவ சிகிச்சை-ஓய்வுக்குப் பின் இன்று கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.
அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த 29ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளானேன். கடவுளின் கிருபையாலும், சோனியா காந்தியின் வாழ்த்தோடும், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்களின் பிரார்த்தனையாலும் உடல் நலம் தேறியுள்ளேன்.
என்னை மருத்துவமனைக்கு வந்து பார்த்த முதல்வர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது நடந்த தாக்குதல் குறித்து அரசு நியமித்த குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் போதும்.
சத்திய மூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தாக்கப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து சோனியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
(இந்த விவகாரத்தில் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் மீது வழக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது)
சத்திய மூர்த்தி பவனுக்குள் வன்முறை கும்பலை அனுமதிக்க முடியாது. எனது மகன் விஷ்ணுபிரசாத் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பார். கட்சி கட்டுப்பாட்டை மீறி யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா கூறியுள்ளார்.
எனக்கு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு திருப்தியாக உள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் கவிதை எழுதியது பற்றி காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். அக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் எனது கருத்தும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம். அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். புலிகளுக்காக புகழ் பாடுவது அதிகரித்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் பல கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆங்காங்கே தாக்கப்படுகிறார்கள். இது தடுத்து நிறுததப்பட வேண்டும். வன்முறை கலாச்சாரத்தை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
என்னை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் வந்து சந்தித்தார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும்போது கட்சித் தலைவர்கள் நேரில் வந்து விசாரிப்பது சகஜம் தான்.
என்னை கட்சி தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள் பதவியை கொடுப்பதும், எடுப்பதும் சோனியாவின் முடிவு. மற்றவர்கள் சொல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்றார்.
முன்னதாக யானை கவுனியில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்:
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது முதுகுளத்தூரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரி பரூக்கி தனது அறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications