மினி பஸ் பெர்மிட்டுக்கு லஞ்சம்: ஆர்.டி.ஓ டிஸ்மிஸ்
திருநெல்வேலி: மினி பஸ் பெர்மிட் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நெல்லை வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
நெல்லை வாட்டார போக்குவரத்து அலுவலராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் கடந்த 2000ம் ஆண்டு விருதுநகரில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றினார்.
விருதுநகர், முதலிபட்டி அருகேயுள்ள வெங்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சிவகுமார் என்பவர் மினி பஸ் இயக்க பெர்மிட் கேட்டு விண்ணபித்தார்.
பெர்மிட் வழங்க ஆர்டிஓ ராஜசேகர பாண்டியன், சிவகுமாரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டார். இதனால் சிவகுமார், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் ராஜசேகர பாண்டியன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர் மீதான 7 குற்றசாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் முன்பு விசாரணைக்கு வந்தபோது மினி பஸ் பெர்மிட் வழங்க ரூ.10,000 லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜசேகரபாண்டியனை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் மாலதி அவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள ராஜசேகர பாண்டியன் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications