தூத்துக்குடியில் போலி மதுபானம் விற்ற பெண் கைது
தூத்துக்குடி: போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பாண்டிசேரி, கர்நாடகா, கேரள மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் சமூக விரோதிகளால் கடத்தி வரப்பட்டு பல்வேறு வழியில் திருட்டுத்தனமாக விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் போலி மதுபாட்டில்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இைதயடுத்து விளாத்திகுளம் டி.எஸ்.பி ஷியாமளாதேவி உத்தரவின்பேரில் தருவைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தருவைகுளம், வேப்பலோடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வேப்பலோடை வடக்குத் தெருவில் உள்ள நடராஜன் என்பவரது மனைவி பார்வதியின் பெட்டிக் கடையில் சோதனை செய்த போது அங்கு 34 அட்டை பெட்டிகளில் 1,713 போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பார்வதியை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிமாநில மது வகைகளை வாங்கி வந்து காலி மது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதற்கு தருவை குளத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் அவரது சகோதரர் முத்துராஜ் என்வரின் உதவியுடன் பல மாதங்களாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
பிடிபட்டுள்ள அனைத்து மது பாட்டில்களிலும் டாஸ்மாக் மது வகைகளில் ஒட்டியிருக்கும் ஹோலாகிராம் ஸ்டிக்கர்களை காணவில்லை. போலீசார் இவை அனைத்திலும் இருந்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பார்வதியின் சகோதரரான் டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் முத்துராஜை தேடி வருகின்றனர்.