செளதியில் கேஸ் குழாய் வெடித்து 6 இந்தியர்கள் உட்பட 36 பேர் பலி
ரியாத்: செளதி அரேபியாவில் கேஸ் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 36 தொழிலாளர்கள் பரிதாபமாக தீயில் கருகி இறந்தனர்.
ஹாவியா என்ற பகுதியில் அராம்கோ கேஸ் உற்பத்தி நிலையத்திலிருந்து பல பகுதிகளுக்கு குழாய் மூலம் கேஸ் கொண்டு செல்லப்படுகிறது.
ஹாவியாவில் இருந்து 30 கிமீ தொலைவில், ஹராத்-உத்மானியா என்ற பகுதிகளுக்கிடையில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கேஸ் குழாயில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கேஸ் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் குழாய்கள் வெடித்து சிதறியதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீயில் சிக்கி இறந்த தொழிலாளர்களில் பலர் வேலையை முடித்துவிட்டு அங்கேயே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களாம். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
பலியான தொழிலாளர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீ விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.