கொலை வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: கல் குவாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சென்னையைச் சேர்ந்தவர் தங்க பாண்டியன் திரிசூலம் மலையில் கல்குவாரி நடத்தி வந்தார். புதிய தமிழகம் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த இவருக்கும், கிருஷ்ணசாமிக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தங்கபாண்டியனின் ஆதரவாளரான மாடசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தூண்டுதலின் பேரில் தான் நடைபெற்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக கிருஷ்ணசாமி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணசாமி கடந்த மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி உட்பட 13 பேரும் ஆஜராயினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 21ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியில் வந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் என்மீது அபாண்டமாக பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.