பரமக்குடியில் பிடிபட்ட பொட்டாஷியம் நைட்ரேட்-புலிகளுக்கு கடத்தப்பட்டதா?
பரமக்குடி: பரமக்குடி அருகே போலீஸ் சோதனையில் பிடிபட்ட வெடிமருந்து மூட்டைள் விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட்டதா என கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வேகமாக சென்ற மினி லாரியை பரமக்குடி அருகே சுந்தனேந்தல் என்ற இடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லாரிக்குள் வெடிமருந்து மூட்டைகள் இருந்தன.
லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்த போலீசார் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் லாரியில் பிடிபட்ட வெடிமருந்தை மதுரை மற்றும் சென்னைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோதனையில் அது பொட்டாஷியம் நைட்ரேட் என உறுதியானது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான மூலப்பொருள் இது.
லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை திருமங்கலத்தில் லோடு ஏற்றப்பட்டதாக கூறியுள்ளார். திருமங்கலத்தில் சென்று விசாரணை நடத்தியதில் இந்த வெடிமருந்து மூட்டைகள் சிவகாசியிலிருந்து கொண்டு வரப்பட்டவை என தெரியவந்தது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்த போலீசார் சிவகாசி விரைந்துள்ளனர். இந்த வெடிமருந்து கடத்தலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வெடிமருந்து விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதா என்று கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications