சென்னையில் கன மழை-சாலைகளில் வெள்ளம்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்தது.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான அதிவேக புயலான சிதர் வங்கதேசத்தை தாக்கியது. இதன் தாக்கம் இன்னும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
வடசென்னை பகுதிகளான மூலக்கடை, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, அயானவரம் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாயுள்ளனர்.
இன்று காலையிலும் தொடர்ந்து பெய்த மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை நகரின் சப்-வேக்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் மழை தொடர்ந்து நீடித்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
புதுச்சேரியில் பலத்த மழை:
புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications