நீதிபதி முன் பிளேடால் கீறிக்கொண்ட முதியவர்
திருநெல்வேலி: தன் மீதான வழக்கு விசாரணை தள்ளிப் போனதால் நீதிபதி முன்பாக தன்னை பிளேடால் கீறிக்கொண்ட முதியவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகேயுள்ள கீழ ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவத் தேவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையிலான சொத்து தகராறு வழக்கு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு வள்ளியூர் நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
விசாரணை முடியாமல் வழக்கு தள்ளிப் போய் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பரமசிவத் தேவர் நீதிமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டு பிளேடால் தனது இரண்டு கைகளையும் கீறிக் கொண்டார். இதில் ரத்தம் பீறிட்டது.
பரமசிவத் தேவரின் இந்த செயல் நீதிபதி உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. உடனே அருகில் நின்ற போலீசார் மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அவரை பிடித்து பிளேடை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.