பாலாற்றின் குறுக்கே அணை: ஆந்திர எல்லையில் பாமக ஆர்ப்பாட்டம்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து பாமக சார்பில் தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் குப்பம் மண்டபம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு டிசம்பர் 6ம் தேதி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கோரியும், ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆந்திர எல்லையான காந்திநகரில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாமக எம்.எல்.ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த வந்த ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினரை ஆந்திர மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜி.கே. மணி,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுவது தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளின் ஜீவாதார உரிமையை பாதிப்பதாகும். இதைத்தடுக்க வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும்.
எங்களை ஆந்திர மாநிலத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியுங்கள், தடுத்து நிறுத்தாதீர்கள். வேண்டுமானால் ஆந்திர மாநில போலீசார் எங்களை தடுக்கட்டும், கைது செய்யட்டும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின் நாங்கள் சட்டத்தையும், தமிழக அரசையும், காவல்துறையையும் மதிக்கிறோம். அதனால் நாங்கள் இங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.
144 தடை உத்தரவு:
இந்த ஆர்ப்பாட்டத்தால் ஆந்திர எல்லையில் அம்மாநில போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே அம் மாநிலத்தில் உள்ள கணேசபுரத்தில் பாமகவினர் சில மாதங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இம்முறை கணேசபுரத்திற்குள் அவர்கள் நுழைவதை தடுக்க 144 தடை உத்தரவை ஆந்திர போலீசார் பிறப்பத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் தமிழக-ஆந்திர எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications