'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது
பெங்களூர்: காங்கிரஸை இரு முறையும், பாஜகவை இரு முறையும் ஏமாற்றி முடித்துவிட்ட மாஜி பிரதமர் தேவெ கெளடா மீண்டும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறார்.
காங்கிரஸ் தலைமையிலான தரம் சிங் அரசை கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வரானார்.
ஒத்துக் கொண்டபடி 20 மாதத்தில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் காங்கிரசுடன் கைகோர்த்து குமாரசாமியை முதல்வர் பதவியில் அமர வைக்க முயன்றார்.
காங்கிரசுடன் பேச்சுவார்ததைகள் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் பாஜகவை ஆதரித்தார் கெளடா. இதையடுத்து பாஜக தலைவர் எதியூரப்பா முதல்வரானார்.
ஆனால், ஒரே வாரத்தில் அவரைக் கவிழ்த்தார்.
இந் நிலையில் கர்நாடக சட்டசபையை கலைக்க கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் கொடுத்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவையைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் கூறியுள்ளார்.
டெல்லிக்குப் ேபான கெளடாவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு காத்துக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என்பதை சோனியாவிடம் தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ஏற்கனவே கெளடாவால் ஏமாற்றப்பட்டுள்ளதால் சோனியா இதுவரை அவரை சந்திக்க முன் வரவில்லை.
கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான தரம்சிங், மல்லிகார்ஜூன கார்கே, பாட்டீல் போன்றவர்களுக்கு கெளடாவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க ஆசை தான். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களான சித்தராமையா, சிவக்குமார் போன்ற தீவிர கெளடா எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை எதிர்த்துள்ளனர்.
தங்களது எதிர்ப்பை நேரடியாகவே டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications