கொலை வழக்கு-திமுக பிரமுகருக்கு உதவிய டிஎஸ்பி: நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கொலை வழக்கு தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளருக்கு உதவி செய்த டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தலித் சமூகத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் புருஷோத்தமனின் மனைவி உமாராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
எனது கணவரை முத்திரையர் இனத்தை சேர்ந்த சிலர் வெட்டி கொலை செய்து விட்டனர். இதில் முதல் குற்றவாளியாக மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் பழனியாண்டியின் உள்ளார்.
இவர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மீது முதல் தகவல் அறிக்கையை மிகவும் சிரமப்பட்டுப் பதிவு செய்தோம்.
அதன்பேரில் போலீசார் 28 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
ஆனால், கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளியான பழனியாண்டியை 9 நாள் கழித்து ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
ஜாமீன் உத்தரவை பார்த்தபோது இந்த வழக்கை விசாரணை செய்த டிஎஸ்பி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தவறான தகவலை நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ளது தெரிய வருகிறது.
எனது கணவரை கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் அதிகாரி கொலையாளிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று முதல் குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து திருச்சி எஸ்பிடம் கூறியபோது தனக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு கிடைக்கவில்லை என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.கே.மணியை நியமிக்கக் கோரி மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அந்த மனுவில் உமாராணி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி,
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டதுடன் வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக எஸ்.கே. மணியை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் ஒரு தலைபட்சமாக செயல்பட்ட டிஎஸ்பி அன்புநேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications